
பெங்களூர், அக்.29: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு முகத்தில் விழுந்த அடி என்று பாஜக மூத்த துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு குறித்து வெங்கய்ய நாயுடு கூறியதாவது: சத்தியமேவ ஜெயதே என்பதற்கு இணங்க, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைத்தலைவர் போப்பையாவின் உத்தரவை
உயர்நீதிமன்றம் ஆமோதித்துள்ளது.
இது மகத்தான தீர்ப்பு. உண்மைக்கு என்றும் அழிவில்லை என்பதை இந்தத்தீர்ப்பு நிலைநாட்டி உள்ளது. தென் மாநிலத்தில் கர்நாடகத்தில் முதன்முதலாக அமைந்த அரசை கவிழ்க்க வேண்டும் என்ற சதித்திட்டம் தில்லியில் உருவானது. அதை கர்நாடகத்தில் காங்கிரஸ் பின்னணியில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி நிறைவேற்ற முற்பட்டு கையை சுட்டுக் கொண்டுவிட்டார்.
இந்த சதியின் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சி. கட்சி விரோத நடவடிக்கையில்
ஈடுபடுவோருக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதுநாட்டிற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்தத்தீர்ப்பு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிகளின் முகத்தில் விழுந்த பெரிய அடியாகும். 27 எம்எல்ஏக்களைக் கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்களுக்கு அதிகாரம் இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால் எப்படியும் எடியூரப்பா தலைமையிலான அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று இரவு-பகல் தூக்கமின்றி
சுற்றிக் கொண்டிருக்கிறார் குமாரசாமி. அவரது முயற்சிக்கு என்றைக்கும் வெற்றி கிடைக்காது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிடும் என பாஜக அதிருப்தியாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் பாஜகவில் மீண்டும் இணைய முயற்சி செய்தனர். அது தடுக்கப்பட்டது. அவர்களை எந்தக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பாஜகவில் சேர்க்க மாட்டோம் என்றார் அவர்.
மாநில பாஜக தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா கூறியதாவது: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கும், கட்சி கட்டுப்பாட்டை மீறுவோருக்கும் இதே கதிதான் ஏற்படும் என்பதற்கு 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு பாடமாக அமைந்துள்ளது. கட்சியில் கட்டுப்பாடுதான் முக்கியம். நான்கு பேர் சேர்ந்து கொண்டால் கட்சியையே வளைக்கலாம், தமது விருப்பப்படி நடத்தலாம் என்று கருதுவோருக்கு தக்க பாடமாக இந்தத்தீர்ப்பு அமைந்துள்ளது என்றார்.